ஜரகண்டி ஜரகண்டி என்ற இடத்திற்கு போகிறோம். அது வெங்கடேச பெருமாள் கோவிலாகவோ அல்லது மூகாம்பிகையாகவோ, அது திருப்பதியாகவோ, தியாகராயநகர் கோவிலாகவோ இருக்கலாம். முப்பத்தைந்து வினாடிக்கு மேல் உங்களால் அங்கு நிற்க முடியாமல் போகலாம். ஆனால் அது போதும், அந்தப் பார்வையில், அங்கு அவர் இருப்பில் உங்களை அவர் காணும்படி நீங்கள் நின்று விட்டு வந்தால் போதும். கண் குளிர அந்த முப்பத்தைந்து வினாடியில் அவரைப் பார்த்தது உங்களுக்குள் நிறைந்திருக்கிறது. அந்த ஒரு இடத்தின், சூழலில், உள் மண்டபத்தில் அல்லது வெளி மண்டபத்தில் அல்லது வெளிக்கும் வெளியான மண்டபத்தில் அல்லது அந்தக் கோவிலை விட்டு மதில் சுவர் தாண்டி வேறு ஏதேனும் ஒரு இடத்தில் அமைதியாக உட்கார்ந்தால் உள்ளே முப்பத்தைந்து விநாடிகள் பார்த்தது மனதில் தோன்றும்.

பலர் இங்குதான் தவறு செய்கிறார்கள். அந்த முப்பத்தைந்து விநாடி பார்த்து விட்டு அடுத்த பஸ் எங்க, அடுத்த சோறு எங்க, அடுத்தபடி எங்கு போகலாம் ஃபோட்டோ எடுத்துக்க என்று ஆரம்பிக்கிறார்கள். உள்ளே வந்தது காணாமல் போய்விட்டது. எதற்கு வந்தோமோ அது தொலைந்து விட்டது. என்ன உள்ளே போய் வாரிக்கொண்டு வந்தாயோ அது அங்கேயே குப்பையில் போட்டு விட்டு வந்துவிட்டாய்.

இது வழிபாடு இல்லை. இது குளறுபடி அல்லது கோவிலுக்குள் நுழையும்போதே லட்டு ஞாபகமும், வடை ஞாபகமும் இருப்பின் அந்தக் கோவிலில் அந்த இடத்திற்கு மட்டும் போய் விட்டு வந்து விடலாம். லட்டு லஞ்சம் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். ஏழு மணி நேரம் காத்திருந்து முப்பத்தைந்து விநாடிகள் எதற்குப் பார்க்க வேண்டும். அங்குக் காத்திருக்கின்ற ஏழு மணி நேரம் எத்தனை அற்புதமான நேரம். உன்னை பார்க்கப் போகிறேன். உன்னை பார்க்கப் போகிறேன். உன்னை தரிசிக்கப் போகிறேன் என்ற ஆவலோடு, ஒரு தபஸோடு அங்கு இருக்க வேண்டியவர்கள் ஊர் கதையெல்லாம் பேசிக் கொண்டு, ‘இனிமே கலைஞர் வருவாருங்கறே’ என்று பேச்சு ஆரம்பித்து பெரும் சிரிப்பும், ஆட்டமுமாய் எதற்குப் போக வேண்டும்.

இவர்கள் வழிபாடு அற்றவர்கள் வழிபாடு என்பது ஒரு வழியில் நிற்றல். இவர்கள் எந்த வழியிலும் நிற்காத தான் தோன்றியாய் வாழ்பவர்கள்.

உங்களுக்கும் கலைஞருக்கும் என்ன சம்பந்தம், ஸ்ரீநிவாஸா கோவிந்தா, ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா, பக்தவச்சலா கோவிந்தா, பாகவதப் பிரியா கோவிந்தா என்று பாடலாம். அந்தப் பாட்டின் போதும் மனம் சிதறலாகத்தான் இருக்கும். அந்தப் பாட்டை தொடர்ந்து பாட பாட எங்கோ மனம் அமைதி பெறும். அந்த அமைதியில் உள்ளே என்ன நடக்கிறது என்பதும், அந்தத் திருவுருவத்தை இடையறாது உள்ளே தேக்கியும், அமைதியாக உடன் வந்த நண்பர்களோடும். மனைவியோடும், குழந்தையோடும் பேசாமல் இருந்தால் அது பெரிய தபஸ்.

“ஏன் அப்பா உர்ருன்னு வர்றாரு.” குழந்தை அம்மாவை கேள்வி கேட்கும்.

‘”அவரு ஜபம் பண்றாருடா. ‘ஓம் ஸ்ரீ வெங்கடேசாயா நம’ அப்படின்னு சொல்லிட்டு வர்ராரு.”

“நானும் சொல்லட்டுமா.”

“சொல்லேன்”

இதுதான் அடுத்த தலைமுறைக்கு நீங்கள் வழங்குகின்ற சொத்து. வேறெதுவும் இல்லை. உங்களைவிட மன அலையல் குறைவான அந்தக் குழந்தை அதைப் பிடித்துக் கொண்டால் இன்னும் வேகமாக முன்னேறுவான். உள்ளே அமைதி பழக்கமாகிவிடும். உள்ளே கடவுள் பெயர் சொல்லிப் பழக்கமான அமைதி கல்லூரி படிப்பில், பள்ளிக்கூட தேர்வில் அவனுக்கு மிகப் பெரிய உதவி செய்யும். அமைதியாக கணக்கு பாடம் கேட்டால் மிகக் கடினமான கணக்கு சட்டென்று பிடிபட்டுவிடும். அவனுக்கு நீங்கள் அமைதியை அந்த வாக்கியத்தின் மூலம் சொல்லிக் கொடுக்கிறீர் கள். நீங்களும் சொல்லி, உங்கள் குழந்தைகளையும் சொல்ல வைத்து, உங்கள் மனைவியும் சொல்ல, உங்கள் குடும்பம் தெளிவாக வளரும், முப்பத்தைந்து விநாடி இழுத்துப் போட்டுவிட்டார்கள், பிள்ளை கேட்கும்.

“என்னப்பா இது?”

“அப்படித்தான்யா. இது போதும். இது கிடைச்சுதே பெரிய அதிர்ஷ்டம்.”

“வருஷத்துக்கு ஒரு தடவைதானே வர்றோம்.”

“இதைப் பாக்கறோம் இல்ல. இது போதும். உட்கார்ந்து சொல்லு. ஸ்ரீ நிவாஸா கோவிந்தா. ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா”

கோவில் பிரகாரத்தில் உட்கார்ந்து பிள்ளைக்கும் சொல்லிக் கொடுங்கள். உள்ளிருக்கின்ற சக்தியினுடைய அதிர்வு வெகுநிச்சயமாய் அந்தக் குழந்தையின் உள்ளே புகுந்து பரவும். இதில் நெல் முனையளவும் சந்தேகம் கொள்ள வேண்டாம்.

“எனக்கு ஒண்ணும் வரலையே” அமைதியில்லாதவர்கள் அப்படித்தான் சொல்வார்கள்.

“எனக்கு வந்துவிட்டதே. நான் கண்டு கொண்டேன்” என்று சொல்பவர்களும் அமைதியில்லாதவர்களே.

அமைதியில் உள்ளே புகுந்த உருவம் உன் அமைதியை மேலும் பலப்படுத்தும். எவர் ஒரு கோவிலை விட்டு மிகுந்த அமைதியோடு, திருப்தியோடு வெளியே வருகிறாரோ அவரே வெளிச்சத்தை கண்டவன். காணவில்லை என்று சொன்னவனும் பொய்யன். கண்டுவிட்டேன் என்று சொன்னவனும் பொய்யன். இது ஒரு அனுபவம். ஒரு இரகசிய அனுபவம். இதை உன் தந்தையோடு பகிர்ந்து கொண்டால் அதே அனுபவம் பெற்ற உன் தந்தை வெகு எளிதில் உன்னை வழி நடத்தி விடுவார்.

“அப்படியா, நல்லது. நீ பெரும் பாக்கியசாலி. ஆனால் இதை அப்படியே விடு. இன்னும் அமைதியாக இரு. இதை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதே. இது சொல்வதற்காக உனக்குக் கொடுக்கப் படவில்லை. தொடர்ந்து செய்வதற்காக உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, சொல்லில் விரயம் செய்து விடாதே. செயலில் தீவிரமாகு.” என்று சொல்லித் தருவார். இது அடர்த்தியான உபதேசம். இதைத் திரும்ப திரும்ப படித்தால்தான் உங்களுக்குள் தெளிவாக புரியும்.

எனவே, நம்முடைய முன்னோர்கள் எதற்காக இந்தக் கோவில் என்பதை உருவாக்கினார்களோ, தொழுவதற்கான இடம் என்று ஒன்றை தேர்ந்தெடுத்து அதனுடைய சிறப்புகளை அங்குப் பெரிதுபடுத்தினார்களோ அந்த இடத்திற்கு போவது நல்லது. ஆன்மீகத் தில் கோவில் என்பது ஆரம்ப பாடம் தான். பக்தி என்பதை வளர்ப்பதற்காக உதவுகின்ற ஒரு இடம்தான் கோவிலுக்கு போகும் போது கண்மூடி ஒரு பிரகாரத்தில் உட்கார்ந்தோமே அதுபோல வேறு எங்கும் முடியுமா. முடியும். பஸ் ஸ்டாண்டில் உட்கார முடியும். ஓடுகின்ற பஸ்ஸில் உட்கார முடியும். திரும்பி வீட்டிற்கு வந்து குளித்து உடை மாற்றி உட்கார முடியும்.

“அந்தக் கோவில் போயிட்டு வந்த பிறகு என்னமோ நல்லாயிருக்குப்பா” என்று தந்தைவிடம் பரிமாறிக் கொள்ள முடியும்.

”அப்படியா. உனக்கு அவ்விதம் தோன்றுகிறதா.”

ஆமாம் என்று சொன்னால், “ஒன்று செய். உனக்கோ கோடை விடுமுறை. நான் காசு தருகிறேன். நீ அந்தக் கோவிலுக்கு மறுபடியும் போய் வா. தனியே போய் வா.” ஞானமான தந்தை இப்படிச் சொல்லிவிடுவார்.

“நீ பள்ளி இறுதி முடித்திருக்கிறாயல்லவா. உனக்குத் தனியே போவது ஒன்றும் கடினமில்லையே. போய் வா.”

இதுவரை தந்தையும், தாயும் அரவணைக்க போய் வந்தாய். ஞானமுள்ள உன் தந்தை உன்னைத் தனியே அனுப்புகிறார். போவதும், போய் இறங்குவதும் ஒரு நல்ல அனுபவம். உள்ளுக்குள் போகும் போது முன்பு சொன்ன அதே விஷயங்கள் ஞாபகம் வரும். ‘ஸ்ரீநிவாஸா கோவிந்தா ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா பக்தவச்சலா கோவிந்தா பாகவதப் பிரியா கோவிந்தா’ தனியே புத்தகம் படித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பாய். சுற்றி முற்றி பலபேர் பல விஷயங்கள் பேசுவது காதில் விழும். எல்லாம் விலக்கலாம். இன்னும் ஆழக் கிடப்பாய். இன்னும் உள்ளுக்குள் தேங்கி நிற்பாய்.

மறுபடியும் தரிசனம். எதனாலேயோ இந்த முறை நீ ஐந்து நிமிடம் வைக்கப்பட்டிருப்பாய். ஆசைப்பட்டு வந்தாயல்லவா. அந்தக் கடவுள் உன்னைக் கைவிட மாட்டார். முப்பது விநாடிகள் மட்டுமே பார்த்துத் துரத்திய அனுபவம் உள்ளுக்குள் தேக்கி வைத்தாயல்லவா இப்பொழுது இன்னும் பார். நன்றாகப் பார். யாரோ இழுத்து ஓரம் நிற்க வைப்பார்கள். கண் குளிர கண் குளிர பார்ப்பாய். யார் நீ யார் நீ. என்ன அழகு. என்ன கம்பீரம். பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறதே. என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும். மறந்துவிட்டதே. என்ன வேண்டும். ஒன்றும் வேண்டாம். நீ தான் வேண்டும். உள்ளே கேள்.

“போறுமா பார்த்தது. போய்ட்டு வாங்கோ.” இழுத்து நிறுத்தியவர் அனுப்புவார்.

எது அவரை அவ்விதம் செய்யத் தூண்டியது என்பது ஆச்சரியமாக இருக்கும். திரும்பித் திரும்பி அவரைப் பார்த்து கை தூக்கி விடைபெற்று வந்து மறுபடியும் பிரகாரத்தில் உட்காருவாய். ஒரே சிரிப்பு, ஒரே குதூகலம். இந்த முறை ஐந்து நிமிடம் நிற்க வைத்தார்கள், உடனே தந்தையிடம் சொல்ல வேண்டும் என்ற பரபரப்பு.

ஆனால், ஞானமுள்ள தந்தையின் மகனல்லவா. சட்டென்று அமைதி பற்றிக் கொள்ளும், பிரகாரத்தில் உட்கார்ந்து போதாது. கிளம்புங்கள் என்று துரத்தியிருப்பார்கள். உள்பிரகாரத்திலிருந்து வெளி பிரகாரம் வந்து அங்கே அமருகிறீர்கள். அங்கேயும் போதாது. கோவிலை விட்டு வெளியே வந்து விட்டீர்கள். மனம் நிறைய அந்தத் திருவுருவம் பிரகாசிக்க உள்ளுக்குள் அமைதியாய் ஏதேனும் ஒரு குளக்கரையில் அல்லது மலைச் சரிவில் அல்லது அறை வராந்தாவில் கண்மூடி தோளில் துணி போர்த்தி உட்கார்ந்திருப்பீர்கள். தந்தை சொல்லிக் கொடுத்திருப்பார். மலைப் பிரதேசத்தில் நிறைய கொசுத் தொல்லை உண்டு. எனவே, தலை முதல் போர்த்திக் கொள் என்று சொல்லிக் கொண்டு இடுப்பில் ஒரு வேட்டியும், மேலே ஒரு வேட்டியும் போர்த்தி உட்கார்த்திருப்பாய். தலை முழுவதும் மறைந்திருக்கும். உள்ளுக்குள்ளே உட்கார, உட்கார அந்தப் போர்வையினால் ஒரு சுகம் ஏற்பட, அந்த அமர்வினால் ஒரு அமைதி ஏற்பட உள்ளுக்குள் ஆழ்ந்து அமர்வாய். இப்பொழுது இன்னும் சில விஷயங்கள் புரியும்.

எங்கிருக்கிறது கடவுள். அங்கிருப்பதா. ஆமாம். அங்கிருப்பது எங்கு இருக்கிறது. இங்கே. இந்த இடத்தில். நடு மார்புக் குழியில், அங்கிருந்து ஒரு விரல் நுனி வலப்பக்கம் தள்ளி. அடே. இடப் பக்கத்தில் இருப்பது என்ன இருதயம் அங்கு இல்லையா. அது இருதயம். இருதயக் கோசம். அது ஒரு தசை குவியல். அது ஒரு தசை இயக்கம். அது இரத்த ஓட்டத்தை சீர் செய்கின்ற கருவி. இரத்தத்தை தூய்மைப்படுத்துகின்ற கருவி அதற்குப் பின்னே இருக்கிறது. அதற்கு நுரையீரல் என்று பெயர். ஆனால் இந்த விஷயம் இது அதாவது அது எங்கிருக்கிறது. இங்கிருக்கிறது. மார்பின் நடுக்குழியிலிருந்து ஒரு விரல் வலப்பக்கம் தள்ளி.

எப்படிச் சொல்கிறீர்கள்.

நான். நான் யார் தெரியுமா. நீங்கள் தலையிலா அடித்துக் கொள்கிறீர்கள். நான் பாலகுமாரன் வயிறு தொட்டா சொல்கிறேன். நான் ரொம்ப நல்லவன். நான் தொடையை தடவியா பேசுகிறேன். நான் என்று சொல்லும் பொழுதுதே உன்னுடைய ஐந்து விரல் களும் இருதயத்தின் வலப்பக்கம் அல்லவா தொடுகின்றன. ‘நான் நல்லாயிருக்கேங்க. நீங்க நல்லாயிருக்கீங்களா. அந்த இருதயத் தின் வலப்பக்கம் தொடுகையில் அந்த இடத்தில் நீங்கள் இருப்பது உறுதியாகிறது. உள்ளுக்குள்ளே பார்க்க அந்த இடத்தில்தான் வெளிச்சம் வந்தது. ஆழ்ந்து நோக்க அது இருப்பு உங்களுக்குத் தெரிய வரும். தான் என்பது தன்னிலை என்பது, தன் இடம் என்பது, அங்குதான் எல்லாமும் இருக்கிறது என்பது அப்போது உணரப்படும்.

கோவில் என்ற விஷயம் இதை உணர்த்தத்தான் உங்களுக்கு தரப்பட்டிருக்கிறது.

லட்டு கொண்டு வந்து கொடுக்கவோ, வடை பரிமாறவோ, அங்கிருந்து காசு கொடுத்து வாங்கிய கற்பூரத்தைக் கொண்டு வந்து நீரிலிட்டு மற்றவருக்கு கொடுக்கவோ அது முயற்சிக்கவில்லை. அதெல்லாம் வியாபாரிகள் செய்த விஷயம். வருமானத்திற்கான விஷயம். உங்களுடைய வருமானம் உள்ளே இருப்பது எது என்று அறிவது. அதை அந்தக் கோவில் அந்தக் கடவுள் செய்துவிட்டார். அப்படி அமைதியாக இருந்தால் வெகு நிச்சயமாக இது நிகழும். இப்பொழுது மூன்றாம் முறை கோவிலுக்குப் போக ஆசைப் படுகிறீர்கள். அது எப்படி இருக்கும். தொடர்ந்து பேசுவோம்.