எழுபது வயதுக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் கடவுள் கொடுக்கும் போனஸ்தான். அங்கே நடமாடிக் கொண்டிருப்பதும் பேசிப் பாடி சிரித்துக் கொண்டிருப்பதும் இன்னமும் கூடுதலானவிஷயம்தான். அப்போது கதை எழுதப் படிப்பதும் யோசிப்பதும் எழுதுவதும் வரம்தான். மருத்துவத்துறை வளர்ச்சியாலும் ஆரோக்கியம்பற்றிய அக்கறையினாலும் இந்நிலை சாத்தியமாகிறது. அதிகம் பேர் எழுபது தொடுகிறார்கள். ஒரு பிரச்சனை, உடல் நிலை வயதை நினைவு படுத்தியபடி இருக்கும். எழுபதுகள் ஒரு அழகான இடம். கூடுதல் மரியாதை கிடைக்கும்.

ஆனால் இளம் வயதில் கெட்ட பழக்கங்கள் இல்லாது உடல் நலம் காத்தால் முதுமை சுகமாகவே இருக்கும். நான் புகைபிடித்தலில் சிக்கினேன். இன்று அதன் கடுமையான விளைவுகள். இலக்கிய படிப்பும் கடவுள் நம்பிக்கையும் பதட்டம் குறைக்கும். பதட்டம்தான் ஆரோக்கிய சீரழிவின் அடிப்படை. அன்பான மனைவியும் ஆதரவான மகனும் அழகான பேரப் பிள்ளைகளும் சூழ்ந்திருப்பின் இது கூடுதல் வரம். மனிதன் விதியின் கைப்பாவை. இல்லையென சொல்பவனைப் பார்த்து சிரித்து விட்டு போகலாம். எழுபதில் இம்மாதிரி வரமற்றவர் மீது பிரேமை பொங்கும். ஆதரவற்றோர் மீது ஆதரவு வரும். அன்பு செய்யத் தோன்றும். என் எழுத்து அவ்வித அன்பின் வெளிப்பாடே. ஆதரவு காட்டும் செயலே. வேறென்ன செய்வதற்கிருக்கிறது இங்கே.