எனக்குத் தெரிந்த பெண்மணி என்னைவிட வயது சிறிய பள்ளித் தோழி . இப்போது ஐம்பத்தாறு வயதுடையவர். என்னிடம் புலம்பினார்.

தினந்தோறும் சமைத்துப் பாத்திரம் கழுவி, வீடு பெருக்கி துணி உலர்தி , தூசு துடைத்து , வருவோர் போவோருக்கு காப்பி போட்டே காலம் கழிகிறதே. எனக்கு எந்த ஞானமும் வராதா? கடவுளை நான் அறிய முடியாதா? உயர்ந்த ஞானம் அடைய முடியாதா? உள்ளொளி பெருக்குவது என்பது எனக்கு நடக்கவே நடக்காதா? கடைசி வரை நான் சமையல்காரிதானா? பாத்திரம் தேய்ப்பவள்தானா? காபி டம்ளர் கழுவும் சுழ்நிலையிலேயே சுருண்டு விழுந்து செத்து விடுவேனா?

தினந்தோறும் சிவநாமம் ஜெபிக்கிறேன். ராமநாமம் எழுதுகிறேன். முடிந்த போதெல்லாம் கோவிலுக்குப் போகிறேன். எல்லாப் பண்டிகைகளையும் முறைப்படி கொண்டாடுகிறேன். ஆனாலும் எனக்கு எதுவும் தெரியவில்லை என்ற எண்ணமே அதிகமாக நிற்கிறது. எந்த முன்னேற்றமுமில்லா தற்குரியாகவே  நிற்கிறேன், என்பதே கவலையாக இருக்கிறது என்று கண்களில் நீர் விட்டுப் புலம்பினார். தொடர்ந்து அழுதார்.

நான் சமாதானப்படுத்தினேன். இந்தப் புலம்பல் கூட நல்ல ஆரம்பம்தான். எனக்கு இது கிடைக்கவில்லை என்று எண்ண ஆரம்பித்து விட்டீர்களானால் இதுவே தேடலின் துவக்கம்தான். குடும்பத் தலைவியாய் இருப்பதால் தான் எனக்கு கிடைக்கவில்லை என்று நீங்கள் பேசுவது தவறு.

” ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ”

என்பது தான் உண்மை. எல்லா உயிர்களிலும் வெளிப்படுகிறான் என்று சமாதானம் சொன்னேன்.

நான் அடுத்த வாரமே திருவாலங்காடு என்கிற தலத்திற்கு போகும்படியாய் நேர்ந்தது. கோயிலைச் சுற்றி வரும்போது, அந்தக் கோவிலில் முக்தி அடைந்த காரைக்கால் அம்மையார் பற்றி யோசிக்க முடிந்தது.