குருப்யோ நம: கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கிறது வாழ்க்கை. வரிசையில் நின்று போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். பெரியாளயிட்டப்பா என் வயதுடையோர் மெல்லியதாக பொறாமையோடு அங்கீகரிக்கிறார்கள்.

ஆனால் என் இருபது வயதில் நான் எதற்கும் லாயக்கில்லாதவன். உண்பதற்கு அமரும்போது என் தகப்பன் என்னை தண்டச் சோறு என்று பலமுறை சொல்லுவார். சொல்லவே அருகில்
அமர்வார். இன்று பலருக்கு பலவிதமாய் உதவுகிறேன். கொஞ்சுகிறார்கள். ஈசா என்கிறார்கள். சிரிப்பாய் இருக்கிறது என்னைப் பார்த்தால். உளறல் ஆள் நான் ஒரு வயது வரை. இன்று வாழ்வு பற்றிபேசி புரியவைக்க இயலும்.

எது திருப்பம்?

பொறாமை அறவே போயிற்று. கோபம் நிதானத்தில் இருக்கிறது. சகலரையும் கனிவுடன் கவனிக்க முடிகிறது.

உணர்ச்சிவசப்பட்டு செயல் செய்பவரை புரிகிறது. கூவலை கடுஞ்சொல்லை குழுவொடு ஆர்பரிக்கிறவரை அ.. அப்பறம் என்றே பார்க்கிறேன். அறிவியலே உலகம் கணிதமே வாழ்வு என்று முடிவு கொண்டவர்களை நேசிக்கிறேன். இவர்கள் கெட்டிக்கார்கள். இது தவறு என்று நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.

கடவுள் தன்மை வந்து விட்டது என்று நடிக்கிறவர்கள்தான் அருவருப்பு. உலகம் இதையும் கொண்டது. விலகு என்று நகர்கிறேன். துன்பத்தில் துவண்டிருப்பவரை காண ஒன்று சொல்ல விரும்புகிறேன் நானே மேலெழும்பி நின்று விட்டேன் உன்னாலா முடியாது

278 படைப்புகளும் இதைத்தான் சொல்கின்றன.

எது என் திருப்பம். உணர முடிகிறது சொல்ல இயலாது.

எல்லா நேரமும் உன்னை கவனித்தபடி இரு. எதிலும் காணாது போகாதே. நானிப்போதும் அப்படியே. இன்று 5-7-17 எழுபத்தியிரண்டில் நுழைகிறேன்.